Search This Blog

Jan 26, 2012

சிவவாக்கியம் (531-535) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (531-535)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -531
மாந்தர் வாழ்வு மண்ணிலே மறைந்த போது விண்ணிலே
சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல்
வேந்தனாகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம்
கூந்தலம்மை கோணலென்றுங் குறிக்கொனாதி துண்மையே.
 
மனிதர் வாழ்வு இப்பூமியில்தான், உயிர் மறைந்தபோது ஆவியாகச் சேர்வது ஆகாயத்தில்தான். ஆகையால் பஞ்ச பூதங்களையும் உணர்ந்து நம் உயிர் உள்ள இடத்தை உடம்பிலேயே அறிந்து கொண்டு அதை யோக ஞான சாதகங்களினால் சரியான பாதையில் நடத்தி ஞானத்தில் வல்லவராக மாறுங்கள். கோன் என்ற அரசனாக உங்கள் உடம்பில் மன்றுள் ஆடும் விமலன் ஆனா ஈசன் பாதம் கண்டு அதையே பற்றி நில்லுங்கள். கருங்கூந்தலை உடைய அம்மையும் கோனாகிய இடம் ஒன்றிலேயே இணைந்து இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அத்திருவடியையே குறித்து நோக்கி தியானித்திருங்கள். மரணத்தை வென்று ஈசன் திருவடியை சேர்ந்து இறவா நிலை பெறலாம் இது உண்மையே.       
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -532
சருகருந்தி நீர்குடித்துச் சாரல் வாழ் தவசிகள்
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே
வருவிரு
ந்தோடு உண்டுடுத்தி வளர் மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.

ஞானம் அடையவேண்டி வீட்டைத் துறந்து காட்டிற்கு சென்று தவம் செய்பவர்களுக்கும் பசி வருத்த வரும். அதனால் காட்டில் உள்ள இலைசருகுகளை அருந்தி அருவி நீரை அள்ளிக்குடித்து மலைசாரல்களில் வாழ்ந்து வரும் தவசிகளே! அந்த சருகுகளை மட்டுமே உண்டு வந்தால் தேகத்தில் உள்ள திசுக்களின் செயலிழந்து உடல் சுருங்கி மன சஞ்சலங்கள்தான் உண்டாகும். மனம் அடங்காது போனால் ஞானம் பெறுவது எவ்வாறு?  அவனை அடைவதே இலட்சியமாய் அனைத்தையும் துறந்து வரும் தவசிகள் பலரும் தவத்தை மறந்து பசியினால் பிச்சைக்கார சாமியார்களாக அலைவதைக் கண்டுணருங்கள். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருந்து உழைத்து உண்டு நல்ல உடைகள் உடுத்தி எல்லாம் சிவன் செயலே என எண்ணி உங்கள் வீட்டிலேயே இல்லறத்தோடிருந்து சகல செல்வ யோகம் ஞானம் மிக்க வாழ்வில் அன்பே சிவமாய் தியானித்து சுகமாய் இருந்து வாருங்கள். ஈசனே உங்களைத் தேடி விருந்தாக வருவான். உங்களுக்கு வேண்டியதை வழங்கி நல வாழ்வைத் தருவான். இது சிவாயம் ஆன உண்மையே.     
 
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -533
காடு மேடு குன்று பள்ளம் கானினாற சுற்றியும்
நாடு தேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ
கூடுவிட்டகன்று உன் ஆவி கூத்தனூர்க்கே
நோக்கலால்
வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பார் இல்லையே. 
 
                       
ஈசனைத் தேடி காடு மேடு குன்று பள்ளம் என்று பாத யாத்திரைகள் செய்து நாடு தேசம் விட்டு தேசம் சுற்றி அலைபவர்கள் நாதன் பாதம் காண்பாரோ!! உங்கள் உடம்பை விட்டு அகன்று உங்கள் உயிர் ஆவியாகி எமனூர்க்குத் தான் போகும். இருந்த இடத்திலிருந்தே உங்களுக்குள் உள்ள மெய்ப் பொருளையே நோக்கித் தவமிருந்து பிறவியின் வீடு பேற்றைப் பெற்று அரன் பாதத்தை பற்றி தியானித்திருப்பவர் இல்லையே.          
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 534
கட்டையா
ற் செய் தேவரும் கல்லினாற் செய்தேவரும்
மட்டையா
ற் செய் தேவரும் மஞ்சளாற் செய்தேவரும்
சட்டையா
ற் செய் தேவரும் சானியாற் செய்தேவரும்
வெட்டவெளி யதன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே.     

மரக்கட்டையால் செய்த தெய்வச் சிலைகளும், கருங்கல்லினால் செய்த தெய்வச் சிலைகளும், தென்னை மட்டையால் செய்த தேவரும், மஞ்சளால் செய்து வைத்த பிள்ளையாரும், சட்டைத் துணியால் செய்யும் தேவரும், பசுஞ்சாணியால் செய்த தேவரும், வெட்ட வெளியாக உள்ள மெய்ப் பொருளையே காட்டும். நமக்குள் வெட்ட வெளியாக உள்ள மெய்ப் பொருளை அன்றி மற்ற வேறு தெய்வம் ஏதும் இல்லையே.       

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 535
தங்கள் தேகம் நோய் பெறின் தனைப் பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்தும் ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்க சொல்லு நலிமிகுந்து நாளுந் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குல தெய்வம் உங்களைக் குலைப்ப துண்மையே.
                 
தங்களுடைய உடம்பு நோயுற்றால் அதிலிருந்து மீள்வதற்கு தங்கள் தெய்வமான பிடாரி கோயிலில் பொங்கல் வைத்து ஆடு கோழிகளைப் பலி கொடுத்து பூசைப் போடுகின்றீர்களே! அதனால் பிணி நீங்குகின்றதா? இதனால் எப்பயனுமின்றி உங்கள் உடம்பு மேலும் நலிவடைந்து ஒவ்வொரு நாளும் நோய் அதிகமாகி மூஞ்சூரைப்போல தேய்ந்து சுருங்கித் தானே போகின்றீகள். உங்களுக்குள் உள்ள தெய்வத்தை அறிந்து நோயை நீக்கும் வழியை உணர்ந்து கொள்ளாமல் இப்படி உங்கள் குல தெய்வங்களுக்குப் போடுகின்ற பூசைகள் உங்களை உருக்குலைத்து அழிப்பதுதான் உண்மை.
             

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!